எழுதாக்கவிதை

அந்த மேசையின் மேல்
நேற்று
ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி
எரிந்தெரிந்து உருகிவிட்டது
கோப்பையிலிருக்கும் தேனீர்
ஆடைபடிந்து ஆறிவிட்டது
டிக்டிக்கித்துக்கொண்டிருந்த கடிகாரம்
சாவியின்றி நின்றுவிட்டது
மேலேயிருக்கும் காலதரின் வழியே
உட்புகுந்த ஒளிக்கற்றையின் பரவலில்
அறையில் படிந்திருக்கும்
தூசி தெரிகிறது
தூரத்தில் தொங்கும்
பூச்சுப்போன கண்ணாடிக்குள்
சிவந்து வீங்கிய கண்களோடு
என் முகம் தெரிகிறது
தொடைக்குக் கீழிருக்கும் கால்கள்
உணர்வற்றுவிட்டன
தூவலைப்பிடித்திருந்த விரல்களில்
தழும்புகள் விழுந்துவிட்டன
சொற்களைத்தேடித்தேடி
சேர்ந்த மூளை
களைத்துவிட்டது
எனினும்
இன்னும் அந்தக்கவிதை
எழுதப்படாமலேயே இருக்கிறது

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...